
ஜோர்ஜ்டவுன், ஜனவரி 12 -பினாங்கு ஜோர்ஜ்டவுனில் உள்ள ஜாலான் பர்மா சாலையில் இன்று நடைபெற்ற கடுமையான விபத்தில், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரண்டு ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில், 71 வயதுடைய வயோதிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று 41 வயதுடைய ஆடவர் பினாங்கு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த முதல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான அந்த 71 வயது முதியவர், இடது வழித்தடத்திலிருந்து திடீரென வலப்புறத்திலிருக்கும் Lengkok Burma சந்திப்பிற்குள் செல்ல முயன்றதே இந்த விபத்திற்கு முக்கிய காரணமென வடகிழக்கு மாவட்ட காவல் துறை தலைவர் Asisten Komisioner Abdul Rozak Muhammad தெரிவித்துள்ளார்.
இதனால், நடுத்தர வழித்தடத்தில் நேராக சென்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் மோட்டார் சைக்கிள்கள், முதல் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூன்றாவது மோட்டார் சைக்கிளை ஓட்டிய 19 வயதுடைய பெண்ணுக்கு வலது காலில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



