
கோலாலம்பூர், பிப்ரவரி-5-ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், பிப்ரவரி 7-ஆம் தேதி கோலாலம்பூர் SOGO பேரங்காடி வளாகத்தில் நடைபெறவுள்ள ‘Gerakan Anti Rumah Anutan Haram’ பேரணிக்கு எதிராக போலீஸ் புகார் அளித்துள்ளார்.
கோலாலம்பூர், டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் அப்புகார் செய்யப்பட்டது.
‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சர்ச்சைக்குப் பெயர்பெற்ற சாம்ரி வினோத் தலைமையில் நூற்றுக்கணக்கில் அரசு சார்பற்ற அமைப்புகள் அப்பேரணிக்குத் திட்டமிட்டுள்ளன.
இது தேசிய ஒற்றுமை மற்றும் சகிப்புத் தன்மைக்கு ஆபத்தானது என ராயர் தனது புகாரில் வலியுறுத்தினார்.
மாமன்னர் பலமுறை வலியுறுத்திய ஒற்றுமை செய்தியை நினைவுபடுத்திய ராயர், தமது போலீஸ் புகார் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர் சந்திப்பும் நடத்தவுள்ளார்.
இவ்வேளையில், தம்மைப் போலவே அனைத்து இன, மத, மொழி மக்களும் போலீஸ் புகார் அளித்து இப்பேரணியைத் தடுக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மற்றவர் நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கக் கூடாது; மாறாக சம்பந்தப்பட்ட தரப்பே அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இப்பேரணி வலியுறுத்துவதாக சாம்ரி வினோத் கூறிக் கொண்டுள்ளார்.



