
கோலாலம்பூர், ஜூன் 23 – இளம் மருத்துவ அதிகாரிகளான
(HousemanShip Doctors ) ளை மனரீதியாக முழுமையாக தயார்படுத்துவதற்கான முன்முயற்சியாக மருத்துவ பயணத்திற்கான வழிகாட்டி கருத்தரங்கு ஏய்ம்ஸ்ட் AIMST பல்கலைக் கழகத்தில் வெற்றிகரமான நடைபெற்றது.
ம.இ.காவின் தேசிய சுகாதாரப் பிரிவு, AIMST பல்கலைக்கழகம், மற்றும் MIED ஆகியோரின் ஒத்துழைப்பில் மிகச் சிறப்பாக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள், ஹவுஸ்மேன்ஷிப் காத்திருக்கும் பட்டதாரிகள், மற்றும் இளம் மருத்தவர்கள் , தங்கள் பணியின் ஆரம்பத்திலேயே மனதளவில் உறுதியான நிலையில் தயாராகுவதோடு , எதிர்கால பணிச்சூழலில் ஏற்படும் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிகப்படியான பணிச்சுமை, பணியிடப் பகடிவதை , மனஅழுத்தம், தூக்கமின்மை, மோசமான ஆதரவு கட்டமைப்புகள் மற்றும் சோர்வு ஆகியவற்றினால் இளம் மருத்துவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகுவதால் சிலர் துரதிர்ஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்துள்ளன. இதை இளம் மருத்துவ பட்டதாரிகள் எவ்வாறு எதிர்கொள்வது என்ற நோக்கத்தில் , இந்த நிலையை உணர்த்தி, மனநல விழிப்புணர்வை ஏற்படுத்தி, தீர்வுகள் நோக்கி முன்னேற வழிகாட்டியாக இந்த நிகழ்வு அமைந்தது.
மேலும் அனுபவமிக்க மருத்துவ வல்லுநர்கள் , அரசாங்க மருத்துவமனை இயக்குனர்கள் மற்றும் இளநிலை மருத்துவர்களின் மனநலப் போராட்டங்களின் அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ளும் கல்வியாளர்களின் குழுவால் வடிவமைக்கப்பட்டு , பல முக்கியமான ஆலோசனைகளும் வழிகாட்டலும் இந்த கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன.
ஒவ்வொரு இளம் மருத்துவரும் மருத்துவ மாணவர்களும், தனக்குள் இருக்கும் மன வலிமையை உணர்ந்து, தனது பயணத்தில் நம்பிக்கையுடன் முன்னேற வழிவகுத்த ஒரு உன்னத முயற்சியாக இக்கருத்தரங்கம் அமைந்ததாக ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினரும் .ம.இ.கா தேசிய சுகாதார பிரிவின் தலைவருமான டாக்டர் தி.நோவலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ். ஏ. விக்னேஸ்வரன், இணை வேந்தர் மான்புமிகு டத்தோஶ்ரீ எம். சரவணன் , ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் துனை வேந்தர் பேராசிரியர் Dr. ச.கதிரேசன், மற்றும் AIMST பல்கலைக்கழகத்திற்கும் MIED நிர்வாகத்திற்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.