
கோலாலம்பூர், ஜூன்-28 – மலேசியாவின் மூத்தப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகம், வழக்கத்திலுள்ள UPU முறையுடன், SATU என்ற இரண்டாவது சேர்க்கை முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
UPU என்பது அரசாங்க நிதியுடன் மாணவர்களை திறமை மற்றும் உறுதிப்பத்திர நடவடிக்கையின் அடிப்படையில் பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கும் முறையாகும்.
இதில் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் கல்வி பெறுகின்றனர்.
மாறாக, SATU என்கிற இப்புதிய முறை முழுக்க-முழுக்க தனிப்பட்ட நிதியில் கல்வி செலுத்தக்கூடிய மாணவர்களுக்கானது.
இது திறமை அடிப்படையில் அமைகிறதென பல்கலைக்கழகம் கூறினாலும், நிதி வசதியுள்ளவர்களுக்கே வாய்ப்பு தரப்படுவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
MCA உள்ளிட்ட அமைப்புகள் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன…
அதாவது, பழைய UPU முறை நல்லபடியாக இயங்கிக்கொண்டிருக்கையில் புதிய முறைக்கு அவசியம் வந்ததேன்? திறமை அடிப்படையிலானது என்றால் ஏழை மாணவர்கள் ஏன் வாய்ப்புகளை இழக்க வேண்டும்? மருத்துவம், பல் மருத்துவம் போன்ற செலவுகள் அதிகமான படிப்புகளில் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பல்கலைக்கழகம் இதற்கு தெளிவான பதிலை இன்னும் வழங்கவில்லை.
பொதுப் பல்கலைக்கழகம் என்பதால், வரி செலுத்தும் மக்களின் நலனும், சமூக சமத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எனவே, SATU முறை உண்மையில் திறமை அடிப்படையிலானதா? அல்லது பணம் உள்ளவர்களுக்கான ஒரு வாய்ப்பா என்பதை விரிவாகவும் வெளிப்படையாகவும் விளக்க வேண்டியக் கடமையும் கட்டாயமும் மலாயாப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உண்டு என்பதை இங்கு நினைவுறுத்த விரும்புகிறோம்..