
பாயான் லெபாஸ், மே 6- கடந்த சனிக்கிழமை, பாயான் லெப்பாஸிலுள்ள ஒரு பேரங்காடியின், ஏழாவது மாடி வாகன நிறுத்துமிடத்திலிருந்து விழுந்து, பெண்ணொருவர் இறந்துள்ளார்.
29 வயதான அப்பெண்ணின் உடன் சரக்கு ஏற்றும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக, தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் சசாலீ அடாம் (Sazalee Adam) கூறினார்.
இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், அவர் சுங்கை பக்காப்பைச் சேர்ந்தவரென்றும், தனது ஹோண்டா சிட்டி காரில் தன்னுடைய தனிப்பட்ட உடைமைகளை விட்டுச் சென்றதும் கண்டறியப்பட்டது.
பாலிக் புலாவ் மருத்துவமனை அதிகாரிகளால் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், உயரமான இடத்திலிருந்து விழுந்து ஏற்பட்ட கடும் காயத்தால் அவர் உயிரிழந்தார் என்று தெரிய வந்துள்ளது.