
புத்ராஜெயா, மார்ச்-12-அல் குர்ஆனை அவமதிக்கும் வகையில் ஒருவர் அதன் மீது கால்வைத்ததாகக் கூறப்படும் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC உடனடி விசாரணையில் இறங்கியுள்ளது.
அப்பதிவை வெளியிட்ட சமூக ஊடக கணக்கின் உரிமையாளரை கண்டறிய சமூக ஊடக தளங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடக்கக் கட்ட கண்காணிப்பில், அப்பதிவின் அசல் உள்ளடக்கம் நீக்கப்பட்டுள்ளதாகவும், “Dickie Borneo” என்ற பெயரில் இருந்ததாகக் கூறப்படும் கணக்கு தற்போது கண்டறிய முடியாத நிலையில் இருப்பதாகவும் MCMC கூறியது.
என்றாலும், மத அவமதிப்பு தொடர்பான முந்தையப் பதிவுகள் சிக்கியுள்ளன; விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இத்தகையச் செயல் இஸ்லாமிய மதத்தை அவமதிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பல்லின- மதங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, பொது மக்கள் இத்தகைய உணர்வுப்பூர்வமான உள்ளடக்கங்களை மீண்டும் பகிர வேண்டாம் என்றும் MCMC அறிவுறுத்தியுள்ளது.
மத அவமதிப்பு மற்றும் சமூக ஒற்றுமையை பாதிக்கும் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அது எச்சரித்துள்ளது.
அல் குர் ஆனை காலால் மிதித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



