
கோலாலம்பூர், மார்ச்-18 – மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் மனித வள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, Premier Employer Network அல்லது PEN திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரே வர்த்தகக் கட்டமைப்பில் உள்ள முதன்மை முதலாளிகள், மேலும் இலக்கிடப்பட்ட பயிற்சி மேலாண்மையை வழங்கவும், இன்னபிற சிறப்பு அனுகூலங்களை அடையவும் உதவும் நோக்கில், இத்திட்டம் தொடங்கியுள்ளது.
முன்னுரிமை, பிரத்யேகம் மற்றும் முதலாளிகளின் வியூக பங்காளித்துவத்தின் அடிப்படையில், இந்த PEN திட்டம் ஆள்பலத் துறை மேம்பாட்டை வலுப்படுத்துவதோடு தொழில்துறையினரின் பங்கேற்பையும் அதிகரிக்கும்.
HRD Corp-பின் தலைமை நிர்வாகி டத்தோ ஷாஹுல் ஹமீத் டாவூட் அவ்வாறு நம்பிக்கைத் தெரிவித்தார்.
இப்புதிய முன்னெடுப்பு வாயிலாக, HRD Corp-பின் கற்றல் மற்றும் மேம்பாட்டு நிபுணர்களின் குழுவை அணுகுவதற்கான பிரத்யேக வாய்ப்பு, முதன்மை முதலாளிகளுக்குக் கிடைககும்.
இதன் மூலம், மேலும் பொருத்தமான தீர்வுகள் கிடைக்கவும், பிரச்னைகள் சுமூகமாகக் கையாளப்படவும் வாய்ப்பு ஏற்படுமென, ஷாஹுல் சொன்னார்.
இந்த PEN திட்டத்தின் கீழ் வரும் ஜூன் தொடங்கி முதன்மை முதலாளிகள் 6 நன்மைகளை அனுபவிப்பர்.
தளர்வுப்போக்கான நிதிக் கொள்கை, தொழில்துறை திறமைக்கான நிதியம், விண்ணப்பங்களுக்கான துரிதப் பாதை, வழிகள் ஒருங்கிணைப்பு, வாடிக்கையாளர் அனுபவம், தொடர்பு நிர்வாகி ஆகியவையே அந்த 6 நன்மைகளாகும்.
இது தவிர, ஆகக்கடைசி தகவல்கள், பயிற்சிகளின் முன்னோட்டம், நன்னடத்தைப் பகிர்வு, சிறப்புக் கழிவு, HRD Corp தூதர் திட்டம் உள்ளிட்ட அனுகூலங்களையும் முதன்மை முதலாளிகள் அனுபவிப்பர்.
PEN திட்ட அறிமுக விழாவில், மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளர் Datuk Azman bin Mohd Yusof உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.