
கோலாலம்பூர், டிசம்பர்-8 – வருடாந்திர வருமானம் RM1 மில்லியனுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் e-invoicing நடைமுறையிலிருந்து விலக்கு பெறுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
சிறிய வணிகங்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் அமைச்சரவை அம்முடிவை எடுத்திருப்பதாக அவர் சொன்னார்.
இதற்கு முன், இந்த விலக்கு RM500,000 -க்கும் கீழ் வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இருந்தது.
செயல்பாடுகளை மேம்படுத்துவதால் பெரிய நிறுவனங்கள் e-invoicing குறித்து புகார் செய்யக் கூடாது.
ஆனால் சிறு நிறுவனங்கள் அப்படியல்ல…அவற்றுக்கு இது செலவாகவும் சுமையாகவும் இருக்கின்றது; இதனைக் கருத்தில் கொண்டே இந்த விலக்கு வழங்கப்படுவதாக அன்வார் விளக்கினார்.
என்ற போதிலும், RM1 மில்லியனுக்கு மேல் வருமானம் பெறும் நிறுவனங்களுக்கு இந்த e-invoicing முறையால் ஏற்படும் தாக்கத்தை அரசாங்கம் நிச்சயம் ஆய்வு செய்யும் என்றார் அவர்.
இதனிடையே, கூடுதலாகச் செலுத்திய வரியைத் திரும்பப் பெறும் நடைமுறையில் சுணக்கம் நிலவுவதாக சீன வணிக சமூகத்தினர் பரவலாகப் புகார் செய்திருப்பது குறித்தும் பிரதமர் கருத்துரைத்தார்.
நிலுவையில் உள்ள வரிப் பணத்தை வணிகங்களுக்குத் திருப்பிச் செலுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் அரசாங்கம் RM2 பில்லியனிலிருந்து RM4 பில்லியனாக ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என அவர் உறுதியளித்தார்.
கோத்தா கினாபாலுவில் உள்ள சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற Madani Sentuhan Rakyat நிகழ்ச்சியில் பிரதமர் அவ்வாறு கூறினார்.



