
கோலாலம்பூர், ஜூன்-6 – அம்னோ மற்றும் பாஸ் கட்சித் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற அண்மையச் சந்திப்பில், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைப் பேணுவது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது;
மாறாக, ‘Muafakat Nasional’ கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிப்பது பற்றி பேசப்படவில்லை என அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
தவிர, இரு கட்சிகளின் உயர் மட்டத் தலைவர்கள் எவரும் அச்சந்திப்பில் பங்கேற்கவில்லை என்றார் அவர்.
தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாரிசான் நேஷனல் அதற்கு முழு ஆதரவை வழங்கும் என்றும், துணைப் பிரதமருமான அவர் உறுதியளித்தார்.
பாஸ் கட்சி தங்களுக்குத் தெரியாமல் அம்னோவுடன் புதிய அரசியல் உடன்பாடுகளைச் செய்ய முயல்வதாக பெர்சாத்து தரப்பிலிருந்து எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சாஹிட் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.



