
கோலாலாம்பூர், ஜூலை-26-மலேசியத் தமிழ் எழுத்துலகில் தனித்துவமான படைப்புகளை வழங்கி வரும் கவிஞர் சீராக்கியின் ‘ஜாலியானந்தா’ நூல் வெளியீட்டு விழா தலைநகரில் கோலாகலமாக நடைபெற்றது.
ஜாலான் ஈப்போ, அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய செட்டியாளர்கள் மண்டபத்தில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையில் இந்நூல் வெளியிடப்பட்டது.
மூத்த அரசியல்வாதியும் முன்னாள் துணையமைச்சருமான தான் ஸ்ரீ க. குமரன், கிள்ளானைச் சேர்ந்த டத்தோ கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
57 கட்டுரைகளைக் கொண்ட இந்நூல், வள்ளுவர், ஔவையார் போன்ற மகான்களின் கருத்துகளை நகைச்சுவை கலந்த எளிய நடையில் சமூகத்திற்கு எடுத்துரைக்கிறது.
நூல் விற்பனை வருமானத்தில் 10,000 ரிங்கிட் ‘அன்பு இல்லம்’ மற்றும் ‘கருணை இல்லம்’ ஆகிய ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்பட்டது.
நூலாசிரியர் ராதாகிருஷ்ணன், நூல் வடிவமான பின்னணி குறித்து வணக்கம் மலேசியாவிடம் விவரித்தார்.
இதுபோன்ற எழுத்துப் படிவங்கள் மலேசிய தமிழ் இலக்கியத்தை மேலும் பன்முகப்படுத்துமென, டத்தோ ஸ்ரீ சரவணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சமூகச் சிந்தனையையும் பொறுப்புணர்வையும் தூண்டும் சிறந்த படைப்பாக ‘ஜாலியானந்தா’ அமையும் என நூல் வெளியீட்டுக்கு வந்திருந்த இதர பிரமுகர்களும் இலக்கிய ஆர்வலர்களும் பொது மக்களும் பாராட்டினர்.



