
தெஹ்ரான், மார்ச்-9-ஈரான் தனது புதிய உச்சத் தலைவராக ஆயதொலா மொஜ்தபா காமேனியை (Ayatollah Mojtaba Khamenei) நியமித்துள்ளது.
இவர், அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனியின் மகனாவார்.
ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக வருபவர், கண்டிப்பாக அமெரிக்காவுக்கு இணங்கியவராக இருக்க வேண்டுமென அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கூறி வருகிறார்.
தனக்குக் கட்டுப்படாத எவரும் அப்பதவியில் நீண்ட காலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாது என்றும் ட்ரம்ப் சூளுரைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஆனால், இதுநாள் வரை வாஷிங்டனுக்கு பெரும் குடைச்சலாக விளங்கி அண்மையில் கொல்லப்பட்டவரான ஆயதொலாவின் மகனையே அப்பதவிக்கு அறிவித்துள்ளனர்.
இதனால் 56 வயது மொஜ்தபாவின் இந்நியமனம், மத்திய கிழக்கில் ஏற்கனவே வெடித்துக் கொண்டிருக்கும் போரை மேலும் தீவிரமாகும் என அஞ்சப்படுகிறது.
என்றாலும், உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஈரானுடையது என்றும், அதில் வெளியாரின் தலையீடு அவசியமற்றது என்றும் தெஹ்ரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.



