
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-20, இன்று நடைபெறவிருந்த ஓர் ஆய்வரங்கை மலாயாப் பல்கலைக்கழக நிர்வாகம் நடத்த விடாமல் செய்திருப்பதாக, மாணவர் அமைப்பொன்று குற்றம் சாட்டியுள்ளது.
“மலேசியாவின் அடையாள நெருக்கடி: மலேசியா மதச்சார்பற்ற நாடா அல்லது மதம் சார்ந்த நாடா?” என்பதே அந்த ஆய்வரங்கின் தலைப்பாகும்.
விளம்பர போஸ்டரின் படி, அதில் அரசியலமைப்பு சட்ட நிபுணர் மாலிம் இம்தியாஸ், பிரபல சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சித்தி காசிம் பேச அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர் அம்சங்களை மேற்கோள் காட்டி, அதனை இரத்துச் செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதான் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வி சுதந்திரமா என, Umany எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக புதிய இளைஞர் இயக்கம் கேள்வி எழுப்பியது.
இப்படி அறிவார்ந்த கலந்தாய்வுகளைப் புறந்தள்ளுவதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக உருமாறும் முயற்சியில் UM பின்வாங்குகிறதா என Umany கேட்டது.
நாடு முன்னேற வேண்டுமென்றால் இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த சிந்தனைக் களம் ஊக்குவிக்கப்பட வேண்டும்; கருத்துப் பரிமாற்றம் நிகழ வேண்டும்.
அதை விடுத்து, சர்ச்சைகளைத் தவிர்ப்போம் என்ற அதே பழைய பஞ்சாங்கத்தைப் பாடிக் கொண்டிருந்தால், ஒரு அடி கூட முன்னே நகர முடியாது என அவ்வமைப்பு சுட்டிக் காட்டியது.
இந்த ஆய்வரங்கை நடத்தும் சிந்தனைப் பிறந்ததே 2023-ல் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றிய உரையிலிருந்து தான்.
மலேசிய அனைத்துலக சட்ட மாநாட்டில் பேசிய அன்வார், “மலேசியா மதச்சார்பற்ற நாடும் அல்ல இஸ்லாமிய இறையாட்சி கொண்ட நாடும் அல்ல” எனக் குறிப்பிட்டார்.
அதனை மேற்கொண்டு விவாதிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அனுமதிக்கப்பட்ட கல்விச் சூழலில் ஏன் மாணவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட வேண்டும் என Umany கேள்வி எழுப்பியது.
தற்போது இந்த ஆய்வரங்கு வெளியில் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு அது நடைபெறுகிறது