
செபராங் ஜெயா, ஏப்ரல்-8-பேராக், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகமான UPSI-யில் பணியாற்றி வரும் இணைப் பேராசிரியர் Dr மனோன்மணி தேவி அண்ணாமலைக்கு, அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
பிறை சட்டமன்ற உறுப்பினரும், பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூ தலைமையில், செபராங் ஜெயா, அருள்மிகு கருமாரியம்மன் கோவிலில், இந்த விழா சிறப்பாக எடுக்கப்பட்டது.
முனைவர் மனோன்மணி தேவி, தமிழ் இலக்கியம் மற்றும் மொழி வளர்ச்சியில் அளித்த பெரும் பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு மலேசியக் கல்வி கோன் கல்வி மேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்தது.
மனோன்மணியின் எழுத்து, ஆய்வு, கல்வி வளர்ச்சி ஆகியவை, மலேசியாவில் தமிழ் மொழி முன்னேற்றத்திற்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, சுந்தராஜூ தமதுரையில் புகழாரம் சூட்டினார்.
“தமிழ் மொழி என்பது வெறும் தொடர்பு கருவி அல்ல, அது அடையாளம், கலாச்சாரம், வரலாறு என்பவற்றின் சின்னம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் பள்ளிகளில் கல்வி தரத்தை வலுப்படுத்துவது தனது முன்னுரிமை என்றும் சுந்தராஜூ வலியுறுத்தினார்.
தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருக்கவும், தமிழ் மொழி மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் சேவை செய்தவர்களைப் பாராட்டிய இவ்விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



