
செமஞ்சே, பிப்ரவரி-17 – இரமலான் நோன்பு மாதத்தில் பள்ளி நேரங்கள் முந்தைய ஆண்டுகளைப் போலவே இருக்கும்; அதாவது சிற்றுண்டிச்சாலைகள் வழக்கம் போலவே செயல்படும்.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் அவ்வாறு கூறியுள்ளார்.
ஏதேனும் சிறப்புத் தேவைகள் அல்லது குறிப்பிட்ட சிக்கல்கள் இருந்தால் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்; மற்றபடி நடப்பிலுள்ள இரமலான் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டார்.
சிற்றுண்டிச் சாலை நடத்துநர்களுக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டிகளே பொருந்தும் என்றார் அவர்.
பள்ளிகளுக்கான SOP நடைமுறையின் ஒரு பகுதியாக இரமலான் மாதத்தில் சிற்றுண்டிச் சாலைகள் தொடர்ந்து செயல்படும் என்று கடந்தாண்டு ஃபாட்லீனா அறிவித்திருந்தார்.
என்றாலும், நோன்பு நோற்பவர்களுக்கு பரஸ்பர மரியாதை கொடுப்பது பற்றி முஸ்லீம் அல்லாத மாணவர்களுக்கு வழிகாட்டுதலையும் கல்வியையும் பள்ளிகள் வழங்க வேண்டும்.
இரமலான் சூழலில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மதிக்கும் பண்பு மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
கடந்தாண்டு இரமலான் நோன்பு மாதத்தில், காலை நேரப் பள்ளிகள் வழக்கமான நேரத்திலேயே செயல்பட்டன; மாலை நேரப் பள்ளிகள் மட்டும் நோன்புத் துறக்க ஏதுவாக சற்று முன் கூட்டியே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.