
வாஷிங்டன், மே-10- சீனப் பொருட்களுக்கான வரி விகிதத்தை 80 விழுக்காட்டுக்கு குறைக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் சந்தித்து வாணிபப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கும் நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவ்வேளையில், அமெரிக்காவுடனான வாணிப மோதல்களுக்கு அச்சந்திப்பு தீர்வை கொண்டு வருமென, சீன வெளியுற அமைச்சு நம்பிக்கைத் தெரிவித்தது.
ஏப்ரல் தொடங்கி அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரிப் போரில் ஈடுபட்டு வருகின்றன.
இரு நாடுகளும் இறக்குமதி வரிகளை மாறி மாறி உயர்த்தி ஒரு கட்டத்தில், சீனாவுக்கு 145% என்றும் அமெரிக்காவுக்கு 125% என்றும் வந்து நின்றது.
இரு நாட்டுத் தலைவர்களும் இறங்கி வராததால் பதற்றம் அதிகரித்து, உலக நாடுகளையும் கவலையுறச் செய்தது.
இந்நிலையில் வரி விகிதத்தை 145%-லிருந்து 80%-க்குக் குறைக்க டிரம்ப் பரிந்துரைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் இந்த திடீர் ‘மனமாற்றம்’, உலகின் அந்த இரு பெரும் பொருளாதார நாடுகளிடையே நீடிக்கும் வாணிப போர் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
என்றாலும் அமெரிக்கா – சீனா இடையிலான பேச்சுவார்த்தை அவ்வளவு லேசில் முடியும் விவகாரமல்ல; கண்டிப்பாக இரு நாடுகளும் ‘இழுத்துப் பிடிக்கும்’ என வாணிப நோக்கர்கள் கூறுகின்றனர்.