
கோலாலாம்பூர், ஜூன்-3-கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையத்தின் ஏற்பாட்டில், விசாக தின நினைவேந்தல் மற்றும் ‘பானா’ (Bana) தர்ம உபதேச நிகழ்வு நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக இலங்கை உயர் ஆணையர் தர்ஷனா எம். பெரேரா (Dharshana M. Perera), செந்தூல் இலங்கை புத்த ஆலயத்தின் தலைமை மத குரு Bhante Sri Saranankara Nayaka Thero, வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செந்தூல், ரவாங், மலாக்கா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25 புத்த மதத் தலைவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த பக்தர்களும் பொது மக்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, மங்களகரமான வழிபாட்டுடன் தொடங்கி குத்துவிளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, பௌத்த மதத் தலைவர்கள் விசாக தினத்தின் உண்மையான செய்தி, மனிதநேயம், கருணை மற்றும் நல்லொழுக்க வாழ்க்கை குறித்து ஆன்மீகச் சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் பேசிய இலங்கை உயர் ஆணையர் தர்ஷனா எம். பெரேரா, இலங்கைக்கும் பௌத்த மதத்திற்குமான வரலாற்றுத் தொடர்பு மற்றும் புத்தரின் வருகை குறித்து விவரித்ததோடு, மலேசியாவின் பன்முகத்தன்மையைப் பாராட்டிப் பேசினார்.
பின்னர் வணக்கம் மலேசியாவிடம் பேசிய அவர், நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்ததோடு, இலங்கை மற்றும் மலேசியாவுக்கிடையிலான உறவு குறித்து கருத்து பகிர்ந்தார்.

மலேசிய மடானி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட உயர் ஆணையர், இரு நாட்டு உறவையும் சிலாகித்துப் பேசினார்.
இவ்வேளையில் செந்தூல் இலங்கை புத்த ஆலயத்தின் தலைமை மத குரு பண்டே ஸ்ரீ சரணங்கர நாயக்க தேரோ (Bhante Sri Saranankara Nayaka Thero) பேசுகையில், மூவின மக்களும் ஒன்றிணைந்து நிகழ்வில் பங்கேற்றதை பாராட்டியதோடு, விசாக தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பக்தி இசை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவுற்றது.



