
கோலாலம்பூர், பிப்ரவரி-8 – Facebook-கில் பார்த்த விளம்பரத்தை நம்பி இல்லாத ஒரு பங்கு முதலீட்டுத் திட்டத்தில் 3.2 மில்லியன் ரிங்கிட்டை பறிகொடுத்து நிற்கிறார், ஓய்வுப் பெற்ற தனியார் துறை ஊழியரான 77 வயது முதியவர்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட EFA Trade எனும் நிறுவனத்தை நம்பி அம்முதியவர் ‘முதலீட்டில்’ இறங்கியதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் தெரிவித்தார்.
நல்ல இலாபம் பார்க்கலாமென்ற எண்ணத்தில், கொடுக்கப்பட்ட 3 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 15 தடவையாக மொத்தம் 3.21 மில்லியன் ரிங்கிட்டை அவர் மாற்றியுள்ளார்.
போட்ட முதலீட்டுக்கு 22 மில்லியன் ரிங்கிட் இலாபம் கிடைத்திருப்பதாக செயலிக் காட்டியதால் முதியவர் ஆனந்தமடைந்தார்.
இந்நிலையில் முதலீட்டுத் திட்டம் விரைவில் மூடுவிழா காண்பதாகவும் எனவே இலாபத் தொகையை எடுக்க வேண்டுமென்றால் மொத்த இலாபத்தில் 15 விழுக்காட்டை கமிஷனாகத் தர வேண்டும் என்றும் கடந்த மாத இறுதியில் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சந்தேகம் வரவே, தனக்கு வழங்கப்பட்ட முதலீட்டு ஆவணங்களை அவர் பரிசோதித்துப் பார்த்துள்ளார்; அப்போது தான் அவையனைத்தும் போலியானவை என அவருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்தே அவர் போலீஸில் புகார் செய்திருக்கிறார்.
எனவே, இலட்சக்கணக்கில் இலாபம் கொட்டுமென சமூக ஊடகங்களில் வெளியாகும் முதலீட்டு விளம்பரங்களை எளிதில் நம்பி மோசம் போக வேண்டாமென டத்தோ ஹுசேய்ன் பொது மக்களை மீண்டும் நினைவுறுத்தினார்.
முதலீட்டு நிறுவனங்களை நம்பலாமா வேண்டாமா என்பதை பேங்க் நெகாரா அல்லது மலேசியப் பாதுகாப்பு ஆணையத்தில் பரிசோதித்து விட்டு காரியத்தில் இறங்குவது நல்லது என்றார் அவர்.