
கங்கார், மார்ச்-28- சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை 2 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க பெர்லிஸ், கங்கார் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Facebook பதிவில் இன்னொரு மதத்தை இழிவுப்படுத்தி, பொது அமைதியை சீர்குலைத்த புகார் தொடர்பில் அவர் விசாரிக்கப்படுகிறார்.
41 வயது சம்ரி வினோத் மீது 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், 1998-ஆம் ஆண்டு தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறவுள்ளது.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் அதனை உறுதிப்படுத்தினார்.
நேற்று மாலை பாடாங் பெசாரில் கைதான சம்ரி வினோத், இரவு முழுவதும் லாக்கப்பில் கழித்தார்.
அவரின் கைப்பேசியையும் விசாரணைக்காகப் போலீஸ் பறிமுதல் செய்தது.
மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்தில் இந்துக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் facebook-கில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, சம்ரி வினோத் கைதானார்