
ஈப்போ, செப்டம்பர் 20 – நேற்றிரவு பேராக் கெமோர் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில், உணவக உரிமையாளரின் வலது கை மாமிசம் அரைக்கும் எந்திரத்தில் மாட்டியதால் அவர் கடுமையாக காயமடைந்தார்.
தகவல் கிடைத்தவுடனேயே, மெரு ராயா தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்பு பணி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) செயல்பாட்டு துணை இயக்குனர், ஷஸ்லீன் முகமட் ஹனாபியா (Shazlean Mohd Hanafiah) தெரிவித்தார்.
மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து கை பகுதிக்கு மயக்க மருந்து செலுத்திய பின்புதான் மீட்பு பணியினர் மீட்பு பணி வேலைகளைத் தொடங்கினர்.
பாதிக்கப்பட்டவரின் வலது கையின் நான்கு விரல்கள் கடுமையாக காயமடைந்ததால் அவரை மருத்துவ குழு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
இந்த விபத்து, உணவகத்தில் பயன்படுத்துவதற்காக மீன் இறைச்சியை அரைப்பதற்கான பணியின் போது நிகழ்ந்தது என அறியப்பட்டது.