
அலோர் காஜா, ஜூன் 4 — மலாக்கா தாமான் பைடூரி, குவாலா இனாவில் (Taman Baiduri, Kuala Ina)உள்ள வாடகை வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஆசிரியர் ஒருவர் கடுமையாக காயமடைந்தார்.
சுல்தான் மன்சூர் ஷா இடைநிலைப்பள்ளியின் ஆசிரியரான அவருக்கு முகம் மற்றும் கைகளில் சுமார் 50 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) தகவலின்படி, சம்பவத்துக்கு முன்பு வீட்டில் எரிவாயு கசிவு காரணமாக சந்தேகத்துக்கிடமான ஒலி கேட்டதாக கூறப்படுகிறது. அதைச் சரிபார்க்க முயன்றபோது திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு துறையின் அவசர மருத்துவ குழு (EMRS) ஆரம்ப சிகிச்சை வழங்கிய பின்னர், பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வெடிப்பின் தாக்கத்தில் வீட்டின் கூரை, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளன என்றும், சமையலறையில் கடுமையான எரிவாயு மற்றும் கரும்புகை சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடும்பத்தினர் கூறுகையில், அவரது நிலை தற்போது நிலையாக உள்ளது என்றும், மேல் சிகிச்சைக்காக அவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



