
ஷா அலாம், ஏப் 29 – ஷா அலாம் செக்சன் 13 இல் தம்மை கடத்தும் முயற்சியிலிருந்து பதின்ம வயது இளைஞன் ஒருவன் தப்பினான். மாலை மணி 5.15அளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தின்போது கடத்தல் சந்தேகப் பேர்வழியுடன் ஏற்பட்ட கைகலப்பில் அந்த இளைஞன் கை மற்றும் முகத்தில் காயம் அடைந்ததாக ஷா அலாம் போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த பகுதியில் தனியான மெது ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞனை திடீரென அங்கு ஒரு காரில் வந்த இரண்டு ஆடவர்கள் தடுத்துநிறுத்தினர். அந்த சந்தேகப் பேர்வழிகளில் ஒருவன் காரிலிருந்து இறங்கி கத்தியை காட்டி மிரட்டியதோடு காரில் ஏறும்படி இளைஞனுக்கு உத்தரவிட்டுள்ளான்.
எனினும் அந்த இளைஞன் காரில் ஏற மறுத்ததால் சந்தேகப் பேர்வழியுடன் கைகலப்பு ஏற்பட்டதோடு அவனிடமிருந்து தப்பியோடி அருகேயுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரிடம் சென்று அவரது உதவியை நாடியதைத் தொடர்ந்து செர்டாங் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டான்.
இச்சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 511 ஆவது விதிமுறையின்கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்