
ஷா ஆலம், ஜூலை 5 – நேற்று, பெர்சியாரன் சுக்கான் செக்சன் 13 இல் (Persiaran Sukan, Seksyen 13), வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த படிவம் நான்கு பயிலும் மாணவர் ஒருவர் சாலை தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்துள்ளார் என்று ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர், முகமட் இக்பால் இப்ராஹிம் கூறியுள்ளார்.
மோட்டார் வண்டியில் பின்புறம் அமர்ந்திருந்த மற்றொரு மாணவருக்கு கழுத்து மற்றும் கால் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஷா ஆலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் உயிரிழந்த அந்த மாணவனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல் தெரிந்த பொதுமக்கள் ஷா ஆலம் மாவட்ட காவல்துறையினரைத் தொடர்புக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.