
ஜோகூர் பாரு, ஜூன்-30-ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா தேவி சக்தி பீட ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழா, கடந்த ஜூன் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
சிங்கப்பூர் துவாஸ் மற்றும் ஃபோரஸ்ட் சிட்டிக்கு அருகில், சொந்த நிலத்தில் அமையப்பெற்றுள்ள இத்திருத்தலத்தில், பெண் தெய்வங்களை முதன்மையாகக் கொண்டு மொத்தம் 54 தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
தென்கிழக்காசியாவிலேயே முதன்முறையாக 12 அடி ஆதிசக்தி பார்வதி கால பைரவி தேவி மற்றும் அஷ்ட கால பைரவர்கள் இங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.
மேலும், 21 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ தாகேஸ்வரி காளி தேவியின் விஸ்வரூபத் தோற்றம் பக்தர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
7.2 அடி உயரத்தில் உலகத்திலேயே மிகப் பெரிய காமாட்சி அம்பாள் சிலையும் இங்கு அமைந்துள்ளது.
இந்தியாவிலிருந்து வந்த குருக்கள் கும்பாபிஷேகத்திற்குத் தலைமைத் தாங்கிய நிலையில், சிங்கப்பூர் மலேசியப் பக்தர்களால் ஆலயம் நிரம்பி வழிந்தது.
ஆலயத் தலைவர் குமாரி டச்சு தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட இப்புனித கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தற்போது 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இப்போதே முன்பதிவு செய்யும் பக்தர்களுக்குச் சிறப்பு தரிசனம் மற்றும் பல்வேறு நன்மைகளைத் தரும் கும்ப நீர் பிரசாதமும் வழங்கப்படுவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.



