
கோலா திரெங்கானு, டிசம்பர் 15 – இணையதளத்தில் வெளியான போலி வேலைவாய்ப்பை நம்பிய 20 வயதுடைய பெண்ணொருவர் சுமார் 67,789 ரிங்கிட்டை அநியாயமாக இழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அப்பெண் நேற்று கோலா திரெங்கானு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று கோலா திரெங்கானு மாவட்ட காவல் தலைவர் Asisten Komisioner Azli Mohd Noor தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 12 ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட அப்பெண் வீட்டில் இருந்தபோது, இன்ஸ்டாகிராமில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் உள்ள இணைப்பை அழுத்தியதன் மூலம் புலனம் மற்றும் டெலிகிராம் செயலியில் இணைக்கப்பட்ட பின்னர் வெறும் 10 ரிங்கிட்டை மட்டுமே முதல் கட்ட கட்டணமாக செலுத்தியுள்ளார்.
பின்னர் ‘Padini Holding’ என்ற பெயரில் உள்ள இணையதளத்தில் பொருட்களை வாங்கி பணம் செலுத்தும் பணிகள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு ஊதியம் வழங்கப்படுமெனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணிகளை செய்துள்ள அவருக்கு முதல் இரண்டு பணிகளுக்கு மட்டுமே 50 மற்றும் 280 ரிங்கிட் லாப பணம் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன் பிறகு, டிசம்பர் 12 முதல் 14 வரை ஐந்து வங்கி கணக்குகளுக்கு 11 முறை பணம் செலுத்தி, மொத்தம்67,789 ரிங்கிட்டை இழந்துள்ளார். எந்த லாபமும் கிடைக்காததால் தன்னை ஏமாற்றியுள்ளனர் என்பதை உணர்ந்து, போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது சேமிப்புத் தொகையையும், நண்பர்களிடம் கடன் பெற்ற பணத்தையும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.



