
லாஹாட் டத்து, மார்ச்-17-சபாவில், 10 வயது மாற்றுத் திறனாளி சிறுமியைக் கற்பழித்தக் குற்றத்திற்காக 79 வயது இந்தோனேசிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
2024-ஆம் ஆண்டு லாஹாட் டத்துவில் உள்ள ஒரு வீட்டில் அக்கொடூரத்தைப் புரிந்ததாக அந்நபர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
அம்முதியவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, செஷன்ஸ் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
பாதிக்கப்பட்ட சிறுமி மாற்றுத் திறனாளி என்பதால் இந்த குற்றம் மிகவும் கடுமையானதும் கவலைக்கிடமானதும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
எனவே, இத்தகைய குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படுவது, குழந்தைகளைக் காப்பதற்கும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும் என நீதிமன்றம் தெரிவித்தது.
மலேசிய சட்டத்தின் படி, கற்பழிப்பு குற்றத்திற்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.



