
கோலாலம்பூர், அக்டோபர்-27, பேராக், பத்து காஜா மே பேங்க் கிளையில் வங்கி நிர்வாகியால் பெண் குமாஸ்தா நிறவெறித் தாக்குதலுக்கு ஆளானதை கண்டித்து, NUBE எனப்படும் வங்கிப் பணியாளர்களின் தேசியச் சங்கம் நேற்று அங்கு அமைதி மறியல் நடத்தியது.
யுவா என்ற அப்பெண்ணுக்கு நியாயம் கோரி 300-க்கும் மேற்பட்ட NUBE உறுப்பினர்கள் அப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
சம்பந்தப்பட்ட நிர்வாகியால் பல முறை தொந்தரவுக்கு ஆளானதோடு, மரியாதையின்றி நடத்தப்பட்டதாகவும் கூறப்படும் யுவா, அவரின் தோல் நிறத்தை குறிக்கும் வகையில் கன்தோனிஸ் மொழியில் இழிவாகவும் பேசப்பட்டுள்ளார்.
மேலிடத்திடம் பல தடவை புகார் கொடுத்தும் பயனில்லை.
சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகியை, பத்து காஜா கிளையிலிருந்து வெறும் 20 கிலோ மீட்டர் தூரமுள்ள இன்னொரு கிளைக்கு மாற்றியதைத் தவிர மே பேங்க் நிர்வாகம் பெரிதாக வேறெந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, NUBE பொதுச் செயலாளர் ஜே.சோலமன் தெரிவித்தார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியக் கலாச்சாரத்தில் இனவெறிக்கும் நிறவெறிக்கும் இடமில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை NUBE ஓயாது என, அறிக்கையொன்றில் சோலமன் தெரிவித்தார்.
அச்சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற மேலதிகாரிகளையும் விடக் கூடாது.
மன உளைச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்ட யுவாவிடம் அவர்கள் பகிரங்கமாகவும் எழுத்துப்பூர்வமாகழும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே NUBE-வின் கோரிக்கை என சோலமன் சொன்னார்.