Latestமலேசியா

சாலை அடாவடி; மோட்டார் சைக்கிளோட்டி மீது காரை ஏற்றிய ஆடவர் கைது

கிள்ளான், ஏப்ரல்-28, சிலாங்கூர் கிள்ளானில் வாக்குவாதம் முற்றி, மோட்டார் சைக்கிளோட்டியின் மீது வேண்டுமென்றே காரை ஏற்றி வைரலான 37 வயது ஆடவர் கைதாகியுள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தாமான் செந்தோசாவில் நிகழ்ந்தது.

அது குறித்து பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததை அடுத்து, ஞாயிறு அதிகாலை 1.15 மணிக்கு அவர் கைதானார்.

விசாரணைக்காக அவர் ஏப்ரல் 30 வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரம்லி காசா கூறினார்.

முன்னதாக வைரலான வீடியோவில், ஓர் ஆடவரை காரொன்று மோதுவதைக் காண முடிந்தது.

மோதப்பட்ட ஆடவர் பின்னர் எழுந்து சாலையோரமாகப் போய் நின்றார்.

50 வயது அந்நபர் உண்மையில், குண்டும் குழியுமாக இருந்த சாலையில் விழாதவாறு மோட்டார் சைக்கிளை பார்த்து கவனமாக ஓட்டியுள்ளார்.

ஆனால் அவர் ஆபத்தாக ஓட்டி விபத்தை ஏற்படுத்த முயலுகிறார் என சந்தேக நபர் தவறாகப் புரிந்துக் கொண்டு ஹார்ன் அடித்துள்ளார்.

இதனால் சினமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி காரை விரட்டிச் சென்று, சந்தேக நபருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதத்தின் போது ஹெல்மட்டை காரின் முன்பக்கக் கண்ணாடியில் அவர் போட்டு அடிக்க, கண்ணாடியில் விரிசல் விழுந்தது.

இதையடுத்தே காரோட்டி, மோட்டார் சைக்கிளோட்டியை மோதி அவர் மீதேறி சென்றது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்டருக்கு இரு கால்கள், தோள்பட்டை போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டது.

அவர் இன்னமும் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!