
தெமர்லோ, ஜூன் 12 – தெமர்லோவில் Jalan Tengku Isamail சாலை சமிக்ஞை விளக்கின் சந்திப்பில் ஒரு மோட்டார்சைக்கிளில் காத்திருந்த இரண்டு பெண்கள் போதைப் பொருள் விநியோகிப்பாளர் என நம்பப்படும் கார் ஓட்டுனர் மோதியதால் மரணம் அடைந்தனர். நேற்றிரவு நடந்த அந்த துயரச் சம்பவத்தில் Lancang, Felda Bukit Damar, தாமான் தெமர்லோ ஜெயாவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான 18 வயது பெண்ணும் ,பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு 18 வயது பெண்ணும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர்.
அந்த இரு இளம் பெண்களும் பானம் அருந்துவதற்காக வெளியே சென்றபோது இரவு மணி 11 அளவில் அந்த விபத்து நிகழ்ந்ததாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் துணை
கமிஷனர் மஸியான் ஹசான் ( Mazian Hassan ) தெரிவித்தார். சிவப்பு எச்சரிக்கை விளக்கு எரிந்துகொண்டிருந்ததால் அப்பெண்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் மோதியதாகவும் , கோலாலம்பூரைச் சேர்ந்த அந்த கார் ஓட்டுனர் காயம் அடையவில்லையென மஸ்லான் கூறினார். அந்த காரில் மேற்கொண்ட சோதனையில் ஷாபு மற்றும் ஹெரொய்ன் போதைப் பொருளைக் கொண்ட பல்வேறு பிளாஸ்டிக் பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கார் ஓட்டுனர் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.