ஈப்போ, நவம்பர் 10 – வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், குவா தெம்பூரோங் ஓய்வுப் பகுதிக்கு அருகில், டிரெய்லர் மோதி இறந்து கிடக்க காணப்பட்ட, புலியின் மீசையை பிடிங்கிய சிலருக்கு எதிராக, PERHILITAN – தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறை போலீஸ் புகார் செய்துள்ளது.
நேற்று மாலை, கம்போங் சிமி போலீஸ் நிலையத்தில் அந்தப் புகார் செய்யப்பட்டதை பேராக் மாநில பெர்ஹிலிடான் இயக்குனர் யூசோப் ஷாரிப் உறுதிப்படுத்தினார்.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மடிந்த வனவிலங்குகளின் நகம், எலும்பு, தோல், மீசை உட்பட உடற் பாகங்களை அனுமதி இன்றி எடுப்பது தவறாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கு குறையாத அபராதமும், 15 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
முன்னதாக, ஆடவர்கள் சிலர், மடிந்து கிடந்த புலியின் மீசையை சில முறை பிடுங்கும் 24 வினாடி காணொளி ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.