
சிரம்பான், மே 22- சிரம்பானில் நேற்று காலை, ‘ஹோண்டா சிவிக்’ வாகனத்தைத் திருடிச் சென்ற 3 சந்தேக நபர்களை காவல் துறையினர் அடுத்த 7 மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக கைது செய்து, வாகனத்தையும் மீட்டுள்ளனர்.
அதோடு, அக்கும்பலால் இதற்கு முன்பு திருடப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
34 முதல் 48 வயதுடைய அம்மூன்று ஆண்களும், கொலை முயற்சி உட்பட 50க்கும் மேற்பட்ட குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பவர்கள் என்று சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், முகமட் ஹட்டா சே தின் (Mohamad Hatta Che Din) கூறினார்.
கைது செய்யப்பட்ட ஆண்களிடமிருந்து, பல வாகனங்களின் சாவிகள், 7 ‘டச் அண்ட் கோ’ அட்டைகள், விலையுயர்ந்த கைப்பைகள் மற்றும் அதனுடன் போதைப்பொருள் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே நேரத்தில், சிறுநீர் பரிசோதனை முடிவுகளில் அம்மூவரும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதும் உறுதியாகியுள்ளது.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு, சந்தேக நபர்கள் விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.