Latestமலேசியா

மே தினம்: வேலை செய்வது பெரிதல்ல, தன்மானத்தோடு வாழ வேண்டும்

கோலாலம்பூர், மே-2, ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம் வெறும் பொது விடுமுறை அல்ல.

மாறாக, இதுவரை நாம் என்னவெல்லாம் சாதித்துள்ளோம் என்பதை திரும்பி பார்க்கவும், இனி நாம் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை திட்டமிடவும் இந்நாளைப் பயன்படுத்த வேண்டும்.

ஆய்வாளரும் சமூகம், பொது கொள்கை, பெண்களின் குரல் தொடர்பில் கட்டுரைகளை எழுதி வருபவருமான சல்மா ஏ. இஸ்மாயில் அவ்வாறு கூறுகிறார்.

இவ்வாண்டு தொழிலாளர் தினத்தை கூடுதல் பெருமையுடன் நாம் கொண்டாட பல காரணங்கள் உள்ளன.

பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்ட விகிதம் 3.1 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.

இதன் மூலம் ஏராளமான மலேசியர்களுக்கு வேலை இருப்பது தெரிகிறது; வெறும் வேலையல்ல, நிலையான அதே சமயம் தன்மானத்தை உறுதிச் செய்யக் கூடிய வேலையாகும்.

ஆள்பல சந்தையிலும் மலேசியா 70.6 விழுக்காட்டைப் பதிவுச் செய்துள்ளது.

வேலைச் சந்தையில் பெண்களின் பங்கேற்பும் 56.8 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் ஏராளமான பெண்கள் பங்களிப்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

TVET எனப்படும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி பட்டதாரிகளுக்கு வேலைக் கிடைப்பதும் 94 விழுக்காடாக உள்ளது.

இது தவிர, சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் சந்தாத்தாரர்களின் எண்ணிக்கையும் 9.9 மில்லியன் பேருக்கு அதிகரித்துள்ளது.

சொந்தத் தொழில் செய்து சந்தா பங்களிப்போரின் எண்ணிக்கையும் 2 ஆண்டுகளில் 700,000 பேரிலிருந்து 900,000 பேருக்கு உயர்ந்துள்ளது.

சமூகப் பாதுகாப்பைப் பெற வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு சொந்தத் தொழில் செய்வோர் மத்தியில் அதிகரித்துள்ளதை இது புலப்படுத்துகிறது.

இல்லத்தரசிகளுக்கான சொக்சோ பங்களிப்பும் உயர்ந்துள்ளது; முந்தைய ஆண்டில் வெறும் 200,000 இல்லத்தரசிகள் மட்டுமே அத்திட்டத்தில் பதிந்துகொண்ட நிலையில், தற்போது அவ்வெண்ணிக்கை 500,000 பேரைத் தாண்டியுள்ளது.

இவ்வாண்டில் ஆகச் சிறந்த அடைவுநிலை என்னவென்றால், நடுத்தர ஊதியம் பெறுவோரின் சம்பளம் முதன் முறையாக 3,000 ரிங்கிட்டை தாண்டியது தான்.

2,700 ரிங்கிட்டிலிருந்து 3,045 ரிங்கிட்டாக சம்பளம் உயர்ந்திருப்பது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவியுள்ளதோடு சிறந்த எதிர்காலத்திற்கான உத்தரவாதத்தையும் கொடுத்துள்ளது.

மேற்கண்ட அடைவுநிலைகள் அத்தனையும் மலேசியா சரியான தடத்தில் பயணிப்பதைக் காட்டுகின்றன.

ஆனால் இதோடு நாம் திருப்தியடைந்து விடக் கூடாது; தொழிலாளர்களின் நலன்களைத் தொடர்ந்து பேண வழி காண வேண்டும்.

இந்த அடைவுநிலையெல்லாம் அவர்களின் வாழ்வில் உண்மையிலேயே மாற்றத்தைக் கொண்டு வருவதை உறுதிச் செய்ய வேண்டும்.

தொழில் தர்மமும் தன்மானமும் கட்டிக் காக்கப்பட வேண்டுமென, தொழிலாளர் தின சிறப்புக் கட்டுரையில் சல்மா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!