
சிங்கப்பூர், ஜூன்-8 – சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான NTU நடத்திய ஆய்வின் படி, உலகில் 48 முக்கிய கடலோர நகரங்கள் நில அரிப்பால் மிக வேகமாக மூழ்கி வருகின்றன.
இது, பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்மட்ட உயர்வுடன் சேர்ந்து, பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
2014 முதல் 2020 வரையிலான காலத்தில், வருடத்திற்கு சராசரியாக 1 சென்டி மீட்டருக்கும் அதிகமாக கீழ் சரிந்த பகுதிகளில் 76 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
சீனாவின் தியான்ஜின் நகரமே மோசமான நில அரிப்பைச் சந்தித்துள்ளது – அங்கு வருடத்திற்கு சராசரியாக 18.7 சென்டி மீட்டர் வரை நிலம் மூழ்கி வருகிறது.
இதனால் பாதுகாப்புக் கருதி மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவானது.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் சென்னையின் தாராமணி போன்ற பகுதிகள் வருடத்திற்கு 3.7 சென்டி மீட்டர் வரை கீழ் சரிந்துள்ளன.
இங்கு 12 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலத்தடி நீரை குறிப்பாக விவசாயம், தொழில்துறை மற்றும் வீட்டு பயன்பாட்டுக்காக அதிகம் எடுத்ததே, தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நகரங்களில் நிலம் மூழ்க முக்கியக் காரணமௌ என NTU கூறுகிறது.
இந்த நில அரிப்பானது, மழைக்கால வெள்ளத்தையும் உப்புநீர் ஊடுருவலையும், கட்டடங்கள் மற்றும் சாலைகளின் சேதத்தையும் அதிகரிக்கிறது.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவாகும்; அம்மாநகரின் பாதியிடம் இப்போது கடல்மட்டத்திற்கு கீழே உள்ளது.
இதனால் தான் இந்தோனேசிய அரசு மேலும் அழிவைத் தடுக்க, புதிய தலைநகரான நுசாந்தாராவை போர்னியோ தீவில் கட்டி வருகிறது.
இந்த நில அரிப்பைத் தடுக்கும் முயற்சிகளாக நிலத்தடி நீர் மேலாண்மை, கடுமையான சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் ஆகியவற்றை NTU பட்டியலிட்டுள்ளது.
ஆனால் இது நினைப்பது போல் எளிதானதல்ல; காரணம்
இப்பிரச்சினை அவசரமானதும் சிக்கலானதுமாகவே உள்ளது என NTU குறிப்பிட்டுள்ளது.