
கோலாலம்பூர், ஜூன் 4 – செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்து வந்த MAVEN விண்கலத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆய்வுப் பணியை நாசா (NASA) அதிகாரப்பூர்வமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்த MAVEN, முதலில் 1 முதல் 2 ஆண்டுகள் மட்டுமே செயல்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டது.
ஆறு மாதங்களாக விண்கலத்துடன் எந்தத் தொடர்பும் ஏற்படாததால், அதை மீண்டும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் விண்கலத்துடனான தொடர்பு ஏன் துண்டிக்கப்பட்டது என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படவுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் எவ்வாறு விண்வெளிக்கு வெளியேறுகின்றன என்பதைப் பற்றி அறிய MAVEN விண்கலம் விஞ்ஞானிகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கியது.
மேலும், செவ்வாய் கிரகத்தில் செயல்படும் நாசாவின் ஆய்வு ரோபோக்களுக்கும் பூமிக்கும் இடையே தகவல்களை பரிமாறும் தொடர்பு மையமாகவும் அது செயல்பட்டு வந்தது. தற்போது அந்தப் பொறுப்பை செவ்வாயைச் சுற்றி வரும் மற்ற செயற்கைக்கோள்கள் ஏற்கவுள்ளன.



