
வாஷிங்டன், ஏப்ரல்-6-உலகின் முக்கியமான எண்ணெய்க் கப்பல் பாதையான Hormuz நீரிணையைத் திறக்காவிட்டால், கிழக்கு நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு ஈரான் ‘நரகத்தைக்’ காணும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நாள் குறித்துள்ளார்.
மலேசிய நேரப்படி பார்த்தால் இது புதன்கிழமை காலை 8 மணியாகும்.
அன்றைய நாளில், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொது கட்டமைப்பு வசதிகள் தகர்க்கப்படும்.
அதுபோன்ற பேரழிவை ஈரான் பார்த்திருக்காது என தனது Truth Social சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
Hormuz நீரிணையை உடனே திறந்து விடுங்கள், இல்லையேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரானை மிரட்டி, அநாகரீகமான சொற்களைக் கொண்டு சமூக ஊடகத்தில் எச்சரித்த சில மணி நேரங்களில், ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தாக்குதலை அறிவித்துள்ளார்.
முந்தையப் பதிவில் ட்ரம்ப் பயன்படுத்திய வார்த்தைகள் சர்ச்சையாகி, இது ஓர் அதிபருக்கு அழகல்ல என கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈரான் அமெரிக்காவுடன் எந்த சமரசத்துக்கும் தயாராக இல்லாமல், தன்னுடைய நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
போர் ஆறாவது வாரத்தை எட்டியிருந்தாலும், தெஹ்ரானில் மக்கள் எந்த சலனமும் இல்லாமல் வார இறுதியை அனுசரித்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேரழிவுக்கு ட்ரம்ப் நாள் குறித்துள்ளதால், இது பெரிய அளவிலான மோதலாக மாறும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
அதே சமயம், ஈரானுக்கு ட்ரம்ப் வழங்கும் மற்றொரு காலக்கெடுவாக இந்த எச்சரிக்கையைப் பார்ப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



