
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-20 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன் Jalan Macalister-ரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரில் திடீரென அம்பு வந்து பாய்ந்ததால் காரோட்டி அதிர்ச்சியடைந்தார்.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி வாக்கில் Ayer Itam-மிலிருந்து Jalan Pangkor செல்லும் வழியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அருகிலுள்ள பள்ளி மைதானத்திலிருந்து வந்ததாக நம்பப்படும் அம்பு, அந்த வெள்ளை நிறக் காரின் பின் பக்க விளக்கில் பாய்ந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
அந்த மைதானம், அம்பெய்தும் விளையாட்டாளர்கள் பயிற்சி மேற்கொள்ளும் இடமாகும்.
காயமின்றி தப்பியக் காரோட்டியான 57 வயது உள்ளூர் ஆடவர் அது குறித்து புகார் செய்திருப்பதை, தீமோர் லாவோட் போலீஸ் தலைவர் Abdul Rozak Muhammad உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, சம்பவ மறுநாளே அந்த மைதானத்தில் பயிற்சிகள் நிறுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
இவ்விவகாரம், மாநில விளையாட்டு மன்றம் மற்றும் மாநில கல்வி இலாகாவுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.