ஜோகூர் RM14 பில்லியன் வருவாய் வழங்கியது; கூட்டரசு அரசு RM16 பில்லியன் நிதி கொடுத்தது – அன்வார்

தங்காக், ஜூன் 23 – ஜோகூர் மாநிலம் கடந்த மூன்று ஆண்டுகளில் கூட்டரசு அரசாங்கத்திற்கு வழங்கிய வருவாயை விட, அம்மாநிலத்திற்கு கூட்டரசு அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் தரவுகளின்படி, 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஜோகூர் மாநிலம் மத்திய அரசின் கருவூலத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 14 பில்லியன் ரிங்கிட் வருவாயை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள், செயல் நடவடிக்கைக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அது தொடர்பான திட்டங்கள் வாயிலாக, மத்திய அரசு ஜோகூர் மாநிலத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 16 பில்லியன் ரிங்கிட் நிதியைத் திரும்ப வழங்கியுள்ளதாக ஜோகூர் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றியபோது அன்வார் சுட்டிக்காட்டினார்.
ஜோகூர் மாநிலத்தின் மேம்பாட்டிற்கான மத்திய அரசின் அர்ப்பணிப்பைத் தெளிவாக உணர்த்தும் வகையில் இது விளக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
முந்தைய அரசாங்கத்தின் கீழ் ஜோகூர் ஆண்டுதோறும் சுமார் 6 பில்லியன் முதல் 7 பில்லியன் ரிங்கிட் வரையிலான நடவடிக்கை செலவின நிதியைப் பெற்ற போதிலும் , மடானி அரசாங்கத்தின் கீழ் இந்தத் தொகை 8.7 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.
ஜொகூர் மக்களின் மேம்பாட்டிற்கும் நலனுக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதில் மத்திய அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அதிகரிப்பு நிரூபித்திருப்பாக அன்வார் தெளிவுபடுத்தினார்.



