
புத்ராஜெயா, டிசம்பர்-24 – நிரந்தர வசிப்பிடவாசிகளுக்கான MyPR அடையாள அட்டை வழங்கல் என facebook-கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடிகள் குறித்து, அரசாங்கம் அதிர்ச்சித் தெரிவித்துள்ளது.
அதனைக் கையாள தொடர்பு – பல்லூக ஆணையமான MCMC உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ ச்சிங் (Teo Nie Ching) தனது facebook பதிவில் அதனைத் தெரிவித்தார்.
அந்த சிவப்பு அடையாள அட்டையை வெறும் 21 நாட்களில் பெற்றுத் தர உதவுவதாக, facebook-கில் மோசடி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
சட்டத்தை மீறிய இச்செயல் விரிவாக விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என துணையமைச்சர் சொன்னார்.
இது போன்ற கட்டண விளம்பரங்களின் உள்ளடக்கங்கள் உண்மையானவை தானா என்பதை உறுதிச் செய்யாமல், facebook எப்படி அவற்றை அனுமதிக்கலாம் என தியோ நீ ச்சிங் கேள்வியெழுப்பினார்.
பயனர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் அல்லவா என்றார் அவர்.
MyPR சிவப்பு அடையாள அட்டையைப் பெறுவதொன்றும் அந்த facebook விளம்பரங்கள் கூறுவது போல் 21 நாட்களில் முடியக் கூடியதல்ல.
உள்துறை அமைச்சின் பல்வேறு கடுமையான நடைமுறைகளைத் தாண்டி நீண்ட நெடிய போராட்டத்தை அது உட்படுத்தியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில், எளிதாக MyPR அட்டைகள் கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியின் உச்சக்கட்டம்.
எனவே பொதுமக்கள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டுமென்றும் துணையமைச்சர் அறிவுறுத்தினார்.