
ஹர்யானா, ஜூன்-9 – இந்தியாவின் ஹர்யானா மாநிலத்தில் MBBS
மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் ஒருவர், தன்னை இருதய மருத்துவ நிபுணராக காட்டிக் கொண்டு, அரசு மருத்துவமனையில் 8 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட இருதய அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
ஒரு நோயாளி உண்மையான மருத்துவரை அணுகிய போது இவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
Dr பங்கஜ் மோஹன் ஷர்மா, MBBS பட்டதாரியாக இருந்தாலும், அவருக்கு இருதய சிகிச்சை நிபுணர் (Cardiologist) என்ற நிலைக்கு உரிய சான்றிதழ்கள் இல்லையென போலீஸார் கூறினர்.
இவரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பல நோயாளிகள் சிக்கல்களில் சிக்கியதும், சிலர் உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.
அரசு – தனியார் பங்காளித்துவ அடிப்படையில் இயங்கி வரும் அந்த இருதய மையம், கடந்தாண்டு ஜூலையில் ஷர்மாவை வேலைக்கு எடுத்துள்ளது.
அவர், உண்மையான இருதய சிகிச்சை நிபுணரான Dr பங்கஜ் மோஹனின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.
அவரது மருந்து சீட்டுகளில், DNB (Cardiology) பட்டம் கொண்ட இருதய சிகிச்சை நிபுணர் என போலி முத்திரை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
2024 ஜூலை முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரை அங்கு பணியாற்றிய ஷர்மா, பின்னர் அவரது சான்றிதழ்கள் குறித்து சந்தேகம் எழுந்தபோது, வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டார்.
பின்னர் உண்மையான Dr பங்கஜ் மோஹன், இந்திய மருத்துவ சங்கத்துக்கு புகார் அளித்து, ஷர்மாவுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார்.
முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறி அம்மருத்துவ மையம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது.
ஷர்மாவால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிலர் இறந்தது தொடர்பாக உறவினர்கள் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.