தென் தாய்லாந்துக்குச் செல்வதை ஒத்தி வைப்பது நல்லது

கோத்தா பாரு, ஜூலை.01- தென் தாய்லாந்துக்குச் செல்ல விரும்பும் மலேசியர்கள் தங்களின் அத்திட்டத்தை ஒத்தி வைப்பது நல்லது என காவல் துறை ஆலோசனை கூறியுள்ளது. உணவு உண்ண மட்டுமே செல்வதென்றால், பரவாயில்லை. ஆனால் சுற்றுப் பயணம் செல்ல ஊக்குவிக்கப்படவில்லை. கடந்த ஒரு வார காலத்தில் தென் தாய்லாந்தில் ஐந்து துப்பாக்க்கிச் சூட்டுச் சம்பவங்களும் குண்டு வெடிப்பும் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி கிளந்தான் காவல் துறை தலைவர் Datuk Mohamad Yusoff Mamat அவ்வாறு ஆலோசனை கூறினார்.
தென் தாய்லாந்திற்கு மக்கள் செல்வதைத் தடுக்க முடியாது. எனினும் அப்பகுதியில் நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, அவசியமான பணிகள் ஏதுமில்லாத பட்சத்தில் மக்கள் தங்களது பயணத்தைத் தள்ளி வைப்பது நல்லது என அவர் கேட்டுக் கொண்டார்.
தாய்லாந்தின் Tak Bai பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி இரண்டு மலேசியர்கள் காயமடைந்ததாக நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவர்களான அப்துல்லா ஷராபி அப்து ரஹ்மானும் (45 வயது) முஹமட் யுஸ்ரி உடினும் Narathiwatட்டில் விடுமுறையைக் கழித்து விட்டு கிளந்தானுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அச்சம்பவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த இருவரும் Narathiwat மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று Hospital Raja Perempuan Zainab II மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.



