
கோலாத் திரெங்கானு, ஜன 22 -தொலைபேசி கும்பலின் மோசடி
வலையில் சிக்கிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சேமிப்புத் தொகையான 60,000 ரிங்கிட்டை இழந்தார்.
பாதிக்கப்பட்ட 24 வயதுடைய மாணவர் நேற்றிரவு இதுகுறித்து புகார் செய்திருப்பதை கோலா தெரெங்கானு போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அஸ்லி முகமட் நோர் ( Azli Mohd Noor ) உறுதிப்படுத்தினார்.
மலேசிய இணைய பாதுகாப்பு அமைப்பிலிருந்து அழைப்பதாக சந்தேகப் பேர்வழி ஒருவன் நவம்பர் 27 ஆம்தேதி தொலைபேசி மூலம் அம்மாணவரிடம் தொடர்பு கொண்டு, போலி இணைப்புகளை பரப்பிவருவதால் இதனை மறுத்து புகார் செய்யும்படி வலியுறுத்தியுள்ளான்.
அதன்பிறகு மறுநாள் தன்னை போலீஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்ட மற்றொரு நபர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அந்த மாணவர் பணமோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி விசாரணையில் ஒத்துழைக்கும்படி கோரியுள்ளான்.
அதோடு வங்கிக் கணக்கை காலி செய்து, தாங்கள் வழங்கும் தற்காலிக வங்கிக் கணக்கிற்கு சேமிப்பு பணத்தை மாற்றுமாறும் அந்த மாணவனிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து டிசம்பர் 2 ஆம் தேதி முதல் டிசம்பர் 9 ஆம்தேதிவரை மொத்தம் 59,400 ரிங்கிட்டை அந்த வங்கிக் கணக்கிற்கு சம்பந்தப்பட்ட மாணவர் பட்டுவாடா செய்துள்ளார்.
அதன்பிறகு அந்த கும்பலிடம் தொடர்பு கொள்ள முடியாமல் போனதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாணவர் புகார் செய்ததால் குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அஸ்லி முகமட் தெரிவித்தார்.



