பினாங்கு, பிப்ரவரி 19 – இளைஞர் ஒருவர் காப்பி கப்புடன் தொப்பிக் கடைக்குள் நுழைந்து, துரதிஷ்டவசமாக அது கீழே கொட்டியதில் தேவையில்லாமல் பத்துக்கும் மேற்பட்ட தொப்பிகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.
தவறுதலாக காப்பி கொட்டியதில் அங்கிருந்த தொப்பிகளின் மீது அது சிந்தி அவை சேதமடைந்தன.
இதனால் சேதத்திற்கு இழப்பீடாக அவற்றை அவர் வாங்க வேண்டியதாயிற்று.
காப்பிக் கொட்டி சேதமான தொப்பிகளின் புகைப்படங்களை முகநூலில் சோகத்துடன் பகிர்ந்த அவ்வாடவர், தனக்கு நேர்ந்தது மற்றவர்களுக்கும் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அறிவுரையையும் வழங்கியுள்ளார்.
” கடைக்குள் நுழையும் போது மறந்தும் உணவுகளையோ பானங்களையோ கொண்டுச் செல்லாதீர். இல்லையென்றால் இப்படித் தான் வீணாக பணத்தை செலவிட வேண்டியிருக்கும்” என அந்நபர் நினைவூட்டல் வழங்கினார்.
ஆனால் அது எந்தக் கடை, அவர் தேவையில்லாமல் வாங்கிய அந்தத் தொப்பிகளின் மொத்த விலை எவ்வளவு என்பது போன்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
என்றாலும் அந்தத் தொப்பிகளைப் பார்க்கும் போது அவை விலையுயர்ந்தவை போல தெரிகிறது. கண்டிப்பாக சில ஆயிரங்களை அவ்விளைஞர் செலவிட்டிருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறினர்.
காப்பியுடன் சென்றவருக்கு இதெல்லாம் தேவை தான்;
அவருக்கு நடந்தது நியாயமே என பெரும்பாலோர் கருத்துக் கூறிய நிலையில் சிலர் அவர் மீது பாவப்படவும் செய்கின்றனர்.