பிலிப்பீன்ஸ், ஜனவரி 9 – பிலிப்பீன்ஸ், மிண்டானாவில் உள்ள சாராங்கனி கடற்கரையில், பல்லாயிரக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதை காட்டும் காணொளி ஒன்று கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
எனினும், அது ஒரு இயற்கையான நிகழ்வு என, அந்நாட்டு மீன்பிடி மற்றும் உயிரியல் வள துறை தெரிவித்திருக்கிறது.
சுற்று வட்டார மக்கள் கூறுவதை போல, மோசமான நிகழ்வின் அறிகுறி அது இல்லை எனவும் அத்துறை கூறியுள்ளது.
அது ஒரு நீர்நிலை ஏற்ற நிகழ்வு. நீரின் ஆழத்திலிருந்து குளிர்ந்த நிலை மேற்பரப்புக்கு உயரும் போது, நீரின் அடிமட்டத்திலுள்ள, ஊட்டச் சத்துக்களும் மேற்பரப்புக்கு உயரும். அதன் விளைவாக, மேற்பரப்பில், மீன்களின் உணவான பிளாங்க்டன் அதிகரிப்பதால், அதனை உண்ண திடீரென படையெடுக்கும் மீன்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
சில சமயங்களில், சிறிய மீன்களை, பெரிய மீன்கள் துரத்துவதாலும் அதுபோன்ற விநோதமான நிகழ்வு ஏற்படலாம். ஆபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சிறிய மீன்கள் ஆழமற்ற பகுதிக்கு வரும் போதும் அதுபோன்ற நிகழ்வு பதிவுச் செய்யப்படலாம்.
கரை ஒதுங்கிய மீன்கள் உயிருடன் இருப்பதாகவும், அவை உண்பதற்கு பாதுகாப்பானவை என்பதோடு பிலிப்பீன்சில் மீன் தட்டுபாடு ஏற்படாது எனவும் அத்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.