
கோலாலம்பூர், நவம்பர் 17 – மலேசிய சிறைச்சாலைகளில் தற்போது 84,143 கைதிகள் உள்ளனர். இது சிறைகளின் அதிகபட்ச கொள்ளளவான 76,311 கைதிகளின் எண்ணிக்கையை மீறி இருப்பதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஷம்சுல் அனுவார் நசாரா (Datuk Seri Shamsul Anuar Nasarah) தெரிவித்தார்.
மேலும் 6,640 பேர் சமூகத்தில் நடைபெறும் புனர்வாழ்வு (Community Rehab) திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், சிறைகளில் 7,872 பேருக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளதென்றும், போதைப்பொருள் குற்றங்களில் கைதானவர்களால் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாய் உள்ளதென்றும் அறியப்படுகின்றது.
இந்த நிலையைக் கட்டுப்படுத்த அரசு பல மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. Tapah, Chenderiang இல் அமைக்கப்பட்டுள்ள Pusat Koreksional Chenderiang என்ற மையத்தில் போதைப்பொருள் தொடர்பான கைதிகளை தனியாக வைத்துப் புனர்வாழ்வு அளிக்கும் திட்டமும் நடைபெற்று வருகின்றது.
அதே நேரத்தில் அரசு, sistem parol, உரிமத்துடன் கைதி விடுவிப்பு போன்ற சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு திட்டங்களையும் விரிவுபடுத்தி வருகிறது. இதனால் சிறை நெரிசல் குறைந்து, கைதிகள் சமூகவியலுக்கு எளிதில் திரும்ப முடியுமென்று கருதப்படுகின்றது.



