நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசுக்கான அம்னோவின் ஆதரவு தொடரும் – சாஹிட் அறிவிப்பு

கோலாலாம்பூர், மே-5-நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு அம்னோ தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மாநில அம்னோ தலைவர்களின் சில கருத்துக்கள் வேறு மாதிரியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக மாறும் எண்ணம் கட்சிக்கு இல்லை.
கட்சிக்குள் உள்ள வேறுபட்ட கருத்துக்கள், அம்னோவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்பதே அம்னோ உச்சமன்றத்தின் முடிவாகும்.
அரசியல் நிலைத்தன்மையை பேணுவது முக்கியம் என, துணைப் பிரதமருமான அவர் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை பதவிலிருந்து இறக்கும் உண்டாங் எனப்படும் 4 மாவட்ட ஆட்சியர்களின் முயற்சியால் நிலவும் அரசியல் சூழ்நிலையை தீர்க்க, அங்கு PH-BN இணைந்து அமைத்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தைக் காப்பாற்ற தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரத்தில் அமினுடன் செயல்பட்ட விதம் சரியல்ல என்றும், தேவைப்பட்டால் எதிர்கட்சியாக செயல்பட தயார் என்றும் நெகிரி அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ Jalaluddin Alias முன்னதாகக் கூறியிருந்த நிலையில், சாஹிட்டின் பேச்சு அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.



