கோலாலம்பூர், டிசம்பர்-30 – 2 மாதங்களுக்கு முன்னர் கோலாலம்பூர், பங்சாரில் வழிப்பறிக் கொள்ளையில் படுகாயமடைந்த 78 வயது மூதாட்டி இன்று மரணமடைந்தார்.
இதையடுத்து, அவ்வழிப்பறிச் சம்பவத்தை போலீசார் மறு ஆய்வு செய்வதாக, பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைவர் கூ மஷாரிமான் கூ மஹ்முட் (Ku Mashariman Ku Mahmood) தெரிவித்துள்ளார்.
கொள்ளையின் போது வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரி 10-ல் தொடங்கவுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டவர் தற்போது உயிரிழந்திருப்பதால், அதனை கொலைச் சம்பவமாக வகைப்படுத்தி மறு விசாரணை செய்ய வேண்டியிருப்பதாக கூ மஷாரிமான் சொன்னார்.
அக்டோபர் 7-ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஜாலான் லீமாவ் மானிஸில் கடைக்கு நடந்துச் செல்லும் போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவன், Lim Foong Mei-யின் கைப்பையைப் பறித்துக் கொண்டு ஓடினான்.
அதில் தடுமாறி கீழே விழுந்து நகர முடியாமலிருந்தவருக்கு, வழிப்போகர்கள் உதவினர்.
தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவுக் காரணமாக மலாயாப் பல்கலைக் கழக மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் உடல்நிலை சீரானதும், பங்சாரில் வீட்டில் வைத்து பராமரிக்கப்படுவதற்காக மாற்றப்பட்ட அம்மூதாட்டி இன்று காலமானர்.
இவ்வேளையில், Foong Mei-யின் மறைவுக்கு, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த வழிப்பறிச் சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனைக்குச் சென்று Foong Mei-யை தாம் நலம் விசாரித்ததை facebook-கில் நினைவுக் கூர்ந்த ஃபாஹ்மி, அன்னாரின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்தார்.