
சண்டாக்கான் – மே 22 – 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, 300,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தைப் பெற்று கொண்டு, 11.3 மில்லியன் மதிப்பிலான சுமார் 39 வங்கி கடனுதவிகளுக்கு ஒப்புதல் வழங்கிய 4 முன்னாள் வங்கி அதிகாரிகள் உட்பட 5 நபர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
30 முதல் 50 வயதுக்குட்பட்ட அச்சந்தேக நபர்கள், நீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க விசாரணைக்கு உதவுவதற்காக சுமார் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சபா ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் டத்தோ கருணாநிதி ஒய். சுப்பையா தெரிவித்துள்ளார்.
மேலும், அச்சந்தேக நபர்கள் அனைவரும், ரொக்கமாகவும், அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்வதன் மூலமாகவும் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த வழக்கு, தீர விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சரியான முடிவினைக் கண்டறியுமென்றும் டத்தோ கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.