
கோலாலாம்பூர், ஜூன்-17 – இவ்வாண்டுக்கான தேசிய தின மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களின் கருப்பொருளாக ‘Malaysia Madani: Rakyat Disantuni’ அதாவது ‘மலேசியா மடானி: அரவணைக்கப்படும் மக்கள்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிப்பதை இக்கருப்பொருள் பிரதிபலிப்பதாக, தொடர்பு துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
இவ்வேளையில், அவ்விரு தினங்களுக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக ‘மலேசியா மடானி’ நிலைநுறுத்தப்பட்டுள்ளது.
பொருள் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு இடையே ஒரு சமநிலையான கொள்கையை, பொருளாதார முன்னேற்றம், நிர்வாக நெறிமுறை மற்றும் சமூக ஒற்றுமை ஆகிய அம்சங்களை இந்த ‘மலேசியா மடானி’ கொள்கை உள்ளடக்கியதாகும்.
2025 தேசிய தினக் கொண்டாட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறும்; அதே சமயம் மலேசிய தினக் கொண்டாட்டம் பினாங்கில் நடைபெறுகிறது.
வழக்கமாக சபா, சரவாக்கில் சுழல் முறையில் நடைபெறும் மலேசிய தின கொண்டாட்டம் இம்முறை பினாங்கில் நடைபெறுவதாக ஃபாஹ்மி தெரிவித்தார்.
Merdeka Countdown எனப்படும் சுதந்திர தின வரவேற்புக் கொண்டாட்டம், 2025 ஜாலூர் கெமிலாங் கொடிகளைப் பறக்க விடுதல் மற்றும் தேசத் தலைவர்களை நினைவுக் கூறும் நிகழ்ச்சிகள் என 14 கூடுதல் நிகழ்ச்சிகள் இவ்வாண்டுக்கான தேசிய தின மற்றும் மலேசிய தின கொண்டாட்ட காலம் நெடுகிலும் நடைபெறும் என்றும் ஃபாஹ்மி கூறினார்.