
பெட்டாலிங் ஜெயா, மே 27 – கடந்த மே 2-ஆம் தேதி, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானிலுள்ள தங்கும் விடுதியொன்றில், தனது பெண் தோழி கடத்தப்பட்டிருப்பதாக சித்தரித்த காணொளியொன்றை, அவரின் தாயாரிடம் காட்டி பணம் பறிக்க திட்டமிட்ட, 23 வயதான ஜாங் ரன்பாவோக்கு (Zhang Runbao) 17,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியில், 18 வயதான யே யிங்சி (Ye Yingxi), அரை நிர்வாணமாகவும், கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையிலும், இருந்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணையின் போது, அப்பெண்ணும் இந்தக் கடத்தல் நாடகத்திற்கு உடந்தை என்பது தெரிய வந்துள்ளது.
2.9 மில்லியன் ரிங்கிட்டைக் கொடுத்தால்தான் மகளை மீட்டெடுக்க முடியுமென்ற ஜாங்கின் வார்த்தைகளை முதலில் நம்பினாலும், பிறகு விழித்துக்கொண்ட அப்பெண்ணின் தாயார் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
சிங்கப்பூர் கல்லூரியில் பயின்று வரும் அச்சந்தேக நபர், குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இரண்டாவது குற்றவாளியான யே விடுதலை செய்யப்பட கூடாதென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.