Latestமலேசியா

பிரதமர் அன்வாரின் செல்வாக்கு 55%; நாடு தவறான பாதையில் செல்வதாக 68% இந்தியர்கள், 55% மலாய்க்காரர்கள், 43% சீனர்கள் கருத்து – மெர்டேக்கா சென்டர் ஆய்வு

கோலாலம்பூர், ஜூன்-24- நாடு தற்போது எதிர்நோக்கும் பிரச்னைகளில் பொருளாதாரமே முதலிடம் வகிப்பதாக பெரும்பாலான மலேசியர்கள் கருதுகின்றனர்.

மெர்டேக்கா சென்டர் நடத்தியக் கருத்துக் கணிப்பில் 73 விழுக்காட்டு வாக்காளர்கள் பொருளாதாரம் குறித்து கவலைத் தெரிவித்தனர்.

பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, ஊழல் போன்றவை மலேசியர்களின் முக்கியக் கவலையாக உள்ளன.

வேலை வாய்ப்புகள் குறித்து 7 விழுக்காட்டினரும், மலாய்க்காரர்களின் உரிமை மற்றும் அனைத்து இனங்களையும் சமமாக நடத்துவது குறித்து 7 விழுக்காட்டினரும் கவலைத் தெரிவித்தனர்.

எனினும் இனவாதம் மற்றும் பொது அமைதி குறித்த கவலை வெறும் 3 விழுக்காட்டில் மட்டுமே இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கவலைகளுக்கு எல்லாம் மத்தியில் பிரதமரின் மக்கள் செல்வாக்கு மட்டும் குறையவில்லை.

கடந்தாண்டு டிசம்பரில் 53 விழுக்காட்டிலிருந்த டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மக்கள் செல்வாக்கு தற்போது 55 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.

36 விழுக்காட்டினர் மட்டுமே அன்வார் மீது அதிருப்தி தெரிவித்தனர்.

9 விழுக்காட்டினர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் நடுநிலை வகித்தனர்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையை நிலை நிறுத்தி அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்ததன் மூலம், அரசு நிர்வாகம் மீதான மக்களின் கவலையைப் பிரதமர் போக்கியுள்ளார் என பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இவ்வேளையில் மடானி அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அடைவுநிலை குறித்து 50 விழுக்காட்டினர் திருப்தியடைந்த வேளை, 48 விழுக்காட்டினர் அதிருப்தி தெரிவித்தனர்.

நாடு தவறான திசையில் பயணிப்பதாக 50 விழுக்காட்டு வாக்காளர்கள் கூறியுள்ளனர்; ஆனால் கடந்தாண்டு பதிவான 61 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் இது பெருமளவு குறைந்துள்ளது.

நாடு தவறான பாதையில் போவதாக 68 விழுக்காட்டு இந்தியர்கள் கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மலாய்க்காரர்களில் 55 விழுக்காட்டினரும் சீனர்களில் 43 விழுக்காட்டினரும் மலேசியா தவறான திசையில் செல்வதாகக் கூறியுள்ளனர்.

அதே சமயம், நாடு சரியானப் பாதையில் போய்க் கொண்டிருப்பதாக கடந்தாண்டு 29 விழுக்காட்டினர் மட்டுமே கூறியிருந்த நிலையில், தற்போது அது 43 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.

மே 12 முதல் 23 வரை, நாடளாவிய நிலையில் பதிவுப் பெற்ற 1,208 வாக்காளர்களிடம் மெர்டேக்கா சென்டர் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!