
சைபர்ஜெயா, ஏப்ரல்-14-நெகிரி செம்பிலான், புக்கிட் பிலாவில் (Bukit Pilah) சேதப்படுத்தப்பட்ட 14 தொலைத் தொடர்பு கோபுரங்களை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
குவாலா பிலா பகுதியில் 2G மற்றும் 4G சேவைகள் பாதிக்கப்பட்டதாக ஏப்ரல் 11-ஆம் தேதி CelcomDigi நிறுவனம் புகர் அளித்திருந்தது.
தொடக்கக் கட்ட விசாரணையில், முக்கியமான தொடர்பு சாதனங்கள் திருடப்பட்டதும், சேதப்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இதனால் அருகிலுள்ள மேலும் 13 கோபுரங்களும் பாதிக்கப்பட்டன.
இச்சம்பவம் காரணமாக சுமார் 1,700 பயனர்கள் பல்வேறு தொலைத்தொடர்பு சேவைகளில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் MCMC மற்றும் CelcomDigi இணைந்து உடனடி சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதில், அனைத்து கோபுரங்களும் தற்போது முழுமையாக செயல்பாட்டில் உள்ளன.
தொலைத் தொடர்பு கட்டமைப்புகளின் அருகில் சந்தேகமான செயல்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக போலீஸுக்கு தகவல் அளிக்குமாறு பொது மக்களை MCMC கேட்டுக் கொண்டது.
இத்தகைய நாசச் செயல்கள் கடுமையான குற்றமாகும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் அபராதமும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.



